சிலை கடத்தல் விவகாரம் நாளுக்கு நாள் பூதகரமாக பெரிதாகி கொண்டே போகிறது. ஏதோ ஒரு கொடவுனில் மட்டுமே சிலைகள் கைப்பற்றப்பட்டன என்ற நிலை மாறி ஏகப்பட்ட இடங்களில் சிலைகள் பதுக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது.
சேவூர் ராமச்சந்திரன் |
இதில் திடுக்கிடும் பல தகவல்கள் நாளுக்கு நாள் வெளியாகிறது. அதில் ஒன்று தான் கோவிலில் சிலைகளை திருடிவிட்டு அந்த இடத்தில் டூப்ளிகேட் சிலைகளை வைப்பது. தற்போது காஞ்சிபுரம் சோமாஸ்கந்தர் சிலை திருடப்பட்டு வேறு சிலை வைக்கப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலின் 3,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த உற்சவர் சிலையுடன் இணைந்திருந்த பாலமுருகன் சிலை திருடுபோனதாக புதிதாக வெளியாகியுள்ள தகவலால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள் ளனர். காஞ்சிபுரம் நகரின் மையப் பகுதியில் பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோயில், இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது. இங்கு 3,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோமஸ்கந்தர் உற்சவ சிலை உள்ளது
இந்நிலையில், பழமை வாய்ந்த உற்சவர் சிலையுடன் இணைந்திருந்த (ஸ்கந்தர்) பாலமுருகன் சிலை கடந்த 1993-ம் ஆண்டு திருபோனதாகவும், அதற்கு பதில் வேறொரு சிலை பயன்படுத்தப்பட்டு வருவதாக புதிதாக தகவல் வெளியாகியுள்ளது. இது, பக்தர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு உற்சவர் சிலை பின்னம் தொடர்பாக, அறநிலையத்துறையின் தலைமை ஸ்தபதி முத்தையா கோயிலில் ஆய்வு மேற்கொண்டார். அவர் அளித்த அறிக்கையில், உற்சவர் சிலையில் உள்ள ஸ்கந்தர் சிலை பழமையானதல்ல என, தெரிவித்துள்ளார். ஏகாம்பரநாதர் கோயில் செயல் அலுவலர் முருகேசனின் சிலை திருடுபோனதாக, சிவகாஞ்சி காவல் நிலையத்தில் கடந்த 1993-ம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், ஆணையரின் அனுமதி பெற்று, திருடு போன சிலைக்கு பதிலாக மாற்று சிலை அமைக்கப்பட்டு உற்சவம் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளதாக வந்த தகவல் தற்போது வெளியாகி பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சிலை கடத்தலில் தொல்லியல் துறைக்கு மிகப்பெரிய பிரச்சனையே இந்து அறநிலைத்துறை ஒத்துழைப்பு இல்லை என்பது என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் உள்ள கோவில்களில் உள்ள சிலைகள் பற்றிய முழுத்தகல்களை பட்டியல் படுத்த மறுக்கின்றனர் என்று கூறப்படுகிறது. தற்போது விவகாரம் பெரிதாவதை ஒட்டி அறநிலைத்துறை அமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளதாக தெரிய வருகிறது.
சிலை கடத்தல் தொடர்பான வழக்கில் அறநிலைத் துறை ஆணையரின் அறிக்கையின் படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கோவில்களில் இருந்து காணாமல் போன சிலைகளை கண்டறிந்து விரைவில் அவற்றை மீண்டும் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறியுள்ளார். இனியாவது அறநிலைத்துறை அதன் ஒத்துழைப்பை அளிக்குமா, தமிழகத்தின் செல்வங்கள் கொள்ளை போவது தடுக்கப்படுமா?
No comments:
Post a Comment